Pages

sai yoga centre

sai yoga centre
Showing posts with label உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம். Show all posts
Showing posts with label உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம். Show all posts

Sunday, January 26, 2014

உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்

ஒற்றைச் சொல் தியானம் என்பது மதம் சார்ந்த விடயமோ அல்லது ஏதும் தத்துவம் சார்ந்த விடயமோ என்ற ஆய்வுக்குள் நுழைய வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.பொதுவில், மனது ஒருங்கிணைப்புக்கான ஒரு பயிற்சி என்றே இதனை எடுத்துக்கொள்ள முடியும்.
ஒரு குறிப்பிட்ட சொல்லை அல்லது எழுத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் போது, காற்றானது நமது நாசியில் ஒரே சீராக சென்று வருகிறது. இப்படி ஒரு லயத்தில் செல்லும் மூச்சுக்காற்றானது உடலில் இதுவரை இருந்து வந்த, தாறுமாறான அதிர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு லயத்தில் ஒருங்கிணைக்கிறது. அதாவது ஒரு பொது இடத்தில் கிளம்பும் இரைச்சல் நின்று போய் அங்கே ஒரு நாதம் கிளம்புகிறது. இந்த நாதமானது உடலுக்கும் மனதுக்கும் மென்மையை தருகிறது.
ஒரு இடத்தை கடந்து செல்ல முயற்சிக்கிறோம். அந்த இடத்தின் அருகில் காதைப்பிளக்கும் ஓசையை வெளிப்படுத்தும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தை கடந்து செல்லும் போது காதுகளை நம்மை அறியாமலே பொத்திக் கொள்வோம். இது இயற்கை. இது போன்றே நம்மை அறியாமலே நம்மை சுற்றி நடைபெறும் செயல்களின் அதிர்வுகள் நமது உடலை அதன் மென்மையான ஆன்மாவை ஏதோ ஒரு விதத்தில் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கின்றன. இதனை அகற்றி அந்த இடங்களுக்கு மென்மையான கீதத்தை கொண்டு சொல்லும் போது அந்த பாகங்கள் அனைத்தும் தனது அதிர்விலிருந்து நின்று இயல்புக்கு திரும்புகின்றன. இந்த மென்மையான கீதத்தை, லயத்தை தருவது தான் ஒற்றைச்சொல் தியானம் என்று சொல்லலாம்.
ஒற்றைச் சொல் தியானத்தின் பலன்களை அதனை அன்றாடம் பயிற்சி செய்து வரும் போது மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
ஓஷோவின் தத்துவங்கள் சில நேரங்களில் புரிதலில் கடுமையானதாக இருந்தாலும் யதார்த்தை பிரதிபலிப்பது உண்மை. இதில் ஒன்றை பார்க்கலாம். " இறக்கும் சுவர்க்கோழி பூச்சி மரணமடைந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அது பாடிக்கொண்டு தான் இருக்கிறது. இறந்து கொண்டிருக்கும் அதன் பாட்டு உயிர் நிறைந்ததாய் உள்ளது. ஒவ்வொரு விழிப்புணர்வுடைய மனிதனும் இப்படி தான் இருக்க வேண்டும். மரணத்துக்குள் காலடி வைத்து விட்ட பிறகும், உயிர் நிறைந்த நிலையிலேயே மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது மரணமே இருக்காது" என்கிறார் ஓஷோ.
ஆம். பிறந்த அனைவருக்கும் மரணம் வரத்தான் போகிறது. பிறகு ஏன் நடந்து போனவற்றையும், நடக்க போகிறவற்றையும் பற்றி கவலைப்படுவானேன்? கண்ணதாசன் கூட தனது அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் எங்கு சுற்றி விளக்கினாலும் கடைசியில் சொல்ல வருவது இது தான். இதே போல் கடஉபநிதஷத்தில் வானத்து தேவர்களுக்கும் மரணம் இருப்பதாக எமன் சொல்வதாக கூறப்பட்டுள்ளது. ஆக, மரணம் இல்லாத வாழ்வு என்பது வானத்து தேவர்களின் வாழ்வை விட சிறப்பாக வாழ்வதில் மட்டுமே என்பதை தான் இந்த உபநிடதங்கள் விளக்கி விட்டு போகின்றன.
இயற்கையில், மதங்கள் கூறுவதெல்லாம் அன்பு செய் அனைவருக்கும் என்பதே!. இது எப்போதும் எல்லாருக்கும் எளிதாக வந்து விடக்கூடிய காரியமல்ல. ஆனால் இந்த குணத்தை எளிதாக கொண்டு வர ஏற்படுத்தப்பட்டது தான் இயமங்கள், நியமங்கள் மற்றும் தியானங்கள் என்று அனைத்தும். இதன் ஒரு பகுதி தான் இந்த ஒற்றைச் சொல் தியானமும்.
அதாவது மிகப்பெரிய மலை என்ற பெருவாழ்வை நோக்கி செல்வதற்கான ஒரு எளிய படி. இந்த படியில் ஏற முடிந்தால், வானத்து தேவர்களை விட பெருவாழ்வை எட்டுகிறேமோ இல்லையோ....இந்த உலக வாழ்வில் பொறுமை, அன்பு போன்ற குணங்களை எளிதில் கடைப்பிடித்து விட இலகுவான ஒன்றாக இந்த ஒற்றைச் சொல் தியானம் என்ற உத்தி பயன்படும் என்பது உறுதி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவர் தனது நோயாளிகளை குணப்படுத்த இந்த ஒற்றைச் சொல் தியான உத்தியை கடைப்பிடித்ததாக தனது அனுபவத்தில் சொல்லியிருந்தார். அவரது வார்த்தைகளில் இருந்தே அதை பார்ப்போம்." ஒற்றைச் சொல் தியான முறை என்பது ஒரு எளிய பிராணயாம பயிற்சி. இதில் மூச்சை உள் இழுக்கும் போதும், வெளிவிடும் போது மிகுந்த நிதானம் தேவை. மெதுவாக படிப்படியாக மூச்சை உள் இழுத்து பயிற்சி செய்யும் போது நுரையீரல் பிராண வாயுவால் நிரம்புகிறது. பிறகு ஓ......ம் என்ற ஒலியுடன் மூச்சை வெளிவிடும் போது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கரியமில வாயு வெளியேறுவதுடன் உடலெங்கும் ஒரு வித அதிர்வு பரவுகிறது. இதை இந்த ஒற்றை சொல் பிராணயாம பயிற்சியை செய்யும் போது நன்றாக உணர முடியும்.
அவரவர் பக்குவம், வயது, திறன், உடல் நிலை இவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வித ஒலிப்பயிற்சிகள் (ஓம் என்பதற்கு பதிலாக ஆமென், அல்லா என்று கூட அவரவருக்கு பிடித்த வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆனால் ம் என்ற முடியும் ஒலிக்கு அதிர்வு அதிகம்). இதை முறைப்படி பின்பற்றினால், அளவிடற்கரிய நன்மைகளை அடையலாம். இந்த பயிற்சியால் நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் இவற்றிலும் மனநிலையிலும் மிகுந்த மாற்றங்கள் தோன்றுவதை உணர முடியும்.
பொதுவாக பத்மாசனத்தில் அமருவதும், மனதை ஒருமுகப்படுத்துவதும் எல்லோருக்கும் எளிதல்ல. மனம் என்பது கட்டுப்பாடற்றது. அது அலைபாயும் இடத்திற்கு எல்லாம் நம்மை இழுக்கும். ஆனால் அதன் போக்கை நாம் புரிந்து கொண்டு அதை கட்டுப்படுத்த முயன்றால் அது பதுங்க தொடங்கி விடும். குறிப்பிட்ட காலத்தில் தப்பிக்க முடியாது என்று தெரிந்த நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கும். இந்த மனதை அடக்க ஓம் ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம். இது நிச்சயமாக பலன் தருகிறது. இந்த பயிற்சியால் உடலும், மனதும் நெகிழ்ந்து போகிறது. வேண்டாத தளர்ச்சியும், சோர்வும் நீங்குகிறது. வாரத்தில் ஒரு மூன்று நாட்கள் மிகுந்த சிரத்தையுடன் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பாக அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் 3 மணி முதல் 4 மணிக்குள்) இதனை பயிற்சி செய்ய தொடங்கினால் விரைவில் தொடர் பயிற்சி எளிதாகி விடும்.
என்னிடம் ஆஸ்துமா நோய்க்காக வைத்தியத்திற்காக ஒருவர் வந்தார். அவரிடம் இந்த ஒற்றைச் சொல் தியான முறையை கடைப்பிடிக்க சொன்னேன். மிகவும் அதிசயமாக, ஒரே வாரத்தில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆஸ்துமாவின் தொந்தரவு வேகமாக குறைந்து நின்று போனது. மருந்துகளால் கட்டுப்படாத ஆஸ்துமா ஒற்றைச் சொல் தியான முறைக்கு அடங்கி போனதில் ஆச்சரியமில்லை. அவ்வளவு பலனுள்ளது. இதே போல் மனச்சோர்வுக்காக வைத்தியத்திற்காக வந்த நோயாளிகள் பலரும் ஒற்றைச் சொல் தியானத்தில் பலனை அடைந்திருக்கிறார்கள். எத்தனையோ மனச்சோர்வுகள் வந்த போதும் அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அந்த அளவுக்கு ஒற்றைச் சொல் தியான முறை எதையும் தூள்தூளாக்கி மனதுக்கும், உடலுக்கும் வலிமை தரும்.
ஒற்றை சொல் தியான முறையால் நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. உடல் தசைகள் வலுவடைகிறது. நினைவு திறன் பெருகுகிறது. முக்கியமாக தன்னம்பிக்கை பெருகுகிறது. நமக்குள் இருக்கும் மன உறுதி வலுவடைந்து விடுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த பயிற்சியால் நமக்கே தெரியாமல் இருக்கும் தேவையில்லாத மனஇறுக்கம், சோர்வு, அச்சம், கனவு தொல்லை, உடல்வலி உள்பட பல நோய்கள் நீங்கிவிடும். நம்மிடம் காலம் காலமாக மறைந்து கிடக்கும் திறமைகளை நமக்கு முற்றிலும் உணர வைக்கும் ஒரு பயிற்சி இது என்பதை கண்கூடாக காணலாம். ஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள். செய்து பார்த்தாலே பலன் தெரியும்.
முந்தைய காலங்களில் இந்தியாவில் சர்க்கரை நோய் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததாக சொல்வார்கள். ஆனால் பசுமை புரட்சி என்ற பெயரில் பயிர்களுக்கு என்றைக்கு ரசாயனத்தை தெளித்தார்களோ அன்றைக்கே நோய்களின் ஆதிக்கமும் தொடங்கி விட்டது என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது இப்போது. பயிர்களுக்கு ரசாயனம் அடித்த காரணத்தால் இப்படி நோய் வருகிறது என்றால் இன்றைக்கு வரும் நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் தான் தீர்வு என்ற நிலையில் புரியாத ரசாயனங்களை எல்லாம் உடலுக்கும் கொண்டு செல்கிறோம். இதன் விளைவு....?!எனவே, மருந்துகளும் அதனால் வரும் பக்க விளைவுகளும் மலிந்து போன இந்த காலகட்டத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க ஒற்றைச் சொல் தியான முறையிலிருந்து புது வாழ்க்கையை தொடங்குவோம்.