குண்டலினி இயக்கம்
மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள். ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு, 900 முறையும், ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும், மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும், வாழ முடியும்.
ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலி பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக முச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு 12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம்.குழந்தையின் உள்நாக்குக்கும், இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும், அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும், அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம்.
6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம். நடக்கும்போது, நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.
யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும், இன்னும் சிலருக்கு மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம்" என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ, சரியாகச் செய்யாவிட்டாலோ விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ, வெளிவிடும்போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப் படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும், அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள்.
நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது, இட, பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி, அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன.

மூலாதாரம்: 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது.
இதன் அதி தேவதை: விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி.
இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம்.
உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.
ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.
உணர்வுகள்: மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும்.
இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி
நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.
மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.
உணர்வுகள்: தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.
அதி தேவதை: வாஹினி, ருத்ரன், லாகினி
உடல் பாகங்கள்: ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.
அனஹதா: மனித உடலின் இருதய பாகம் இது. 12 இதழ் கொண்ட தாமரைப்பூவடிவில் உள்ளது. பச்சை நிறமான இதுக்குக் காற்றின் சக்தி உள்ளது. இந்தக் காற்று இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? தவிர, நாம் உள்ளிழுப்பதும் காற்றுத் தான். வெளி விடுவதும் காற்றுத் தான். (இ.கொ. இப்போப் புரியுதா? சித்தர்களின் கண்டுபிடிப்பின் அற்புதம்?) விஞ்ஞானம் எல்லாம் நிரூபிக்கும் முன்னேயே மெய்ஞானம் பெற்ற நம் சித்தர்கள் ஒரு நாளும் தவறாய்ச் சொல்லவில்லை இல்லையா?
உணர்வுகள்; ஏமாற்றுதல், ஏமாறல், குழப்பமான மனநிலை, வருந்துதல், நம்பிக்கை, ஆசை, எதிர்பார்ப்பு, பாரபட்சம் இன்மை, திமிராய் இருத்தல், மட்டம் தட்டுதல், பொஸஸிவாக இருத்தல்(தமிழிலே என்னங்க?)
ஜீவாத்மா இங்கே தான் இருக்கிறது. என் மனசே சரியில்லை, நெஞ்சு வலிக்கிறது அவன் செய்த தப்பைப் பார்த்தால் என்றெல்லாம் சொல்கிறோமே, அப்படிப் பட்ட மனித மனத்தின் இன்ப, துன்ப நிலக்குக் காரணமான மனோதத்துவத்தைச் செயல் ஆற்றுவது இங்கே தான்.
அதி தேவதைகள்: வாயு, இஷா, காகினி.
உடலில் இது இருக்கும் இடம்: இருதயம், தோல், உடல்நிலையைச் சமமாக வைத்திருக்கும் இது சரியாகச் செயல்பட்டால்.
விஷுத்தா: கழுத்துப் பாகம். 16 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பு. இது எல்லை இல்லாத அகன்ற பரந்த ஆகாயத்தைக் குறிக்கிறது. ஆகையால் ஆகாயம் எவ்வாறு நிறமற்றதோ அவ்வாறே இதுவும் நிறமற்றது. நாம் செய்யும் வேலைகளில் எது சரி, எது தப்புன்னு முடிவு எடுக்கப் படும் இடம் இங்கே தான். நம்முடைய கற்பனா சக்தி பெருகுவதற்கும், நம்முடைய சுயம் வெளிப்படுவதும் இங்கே இருந்து தான். இது "பிந்து"சக்கரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. இங்கே விஷமும் தயார் நிலையில் உள்ளது. அமிர்தமும் தயார் நிலையில் உள்ளது. நாம் எதை எடுத்துக்கறோம்னு சொல்றது நம்மோட எண்ணங்களைப் பொறுத்து. சிலபேர் சுடுசொல் சொல்லும் போது விஷம் போல் பேசுகிறான் என்கிறோம். அவன் வார்த்தையை விழுங்க முடியவில்லை. அவ்வளவு விஷம் என்கிறோம். எல்லாம் வருவது இங்கே இருந்து தான். நம் உள்ளம் பால் போல் இருந்தால் அமிர்த மயமான வாக்குப் பிறக்கும். நம்முடைய "விதி"யின் ரகசியம் இங்கே தான் உள்ளது. நம்முடைய பேச்சிலும், செயலிலும் விதி நிர்ணயிக்கப் படுகிறது. இது மூடிக் கொண்டால் மரணம் சம்பவிக்கும். திறந்து கொண்டால் நேர் எதிமாறாக நடக்கும். நாம் முக்தி நிலையைத் தன்னால் அடைகிறோம். எப்படி எனில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் மாறி ஞான மார்க்கத்தில் மனமும், உடலும் திரும்பும். ஞான மார்க்கத்தை விரும்பிக் கற்பர்.
அதி தேவதைகள்: அம்பாரா, சதாசிவம், ஷாகினி.
உடல் பாகம்: தைராயிடு சுரப்பிகளும், காதுகளும்.
இவை இல்லாவிட்டால் உடல் வளர்ச்சியும் இல்லை, மன முதிர்ச்சியும் இல்லை.
அஜ்னா: நம்முடைய இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பெண்கள் நெற்றிப் பொட்டு வைக்கும் இடத்தில் உள்ளது. நெற்றிப் பொட்டைப் "பிந்து" என்று சொல்லும் வழக்கமும் உண்டு. இந்தப் பிந்து இதற்குப் பின்னால் தான் இருக்கிறது. அடுத்து அதைத் தான் பார்க்கப் போறோம். இந்த அஜ்னா இருக்கும் இங்கே தான் இட நாடி, பிங்கள நாடியுடன் சேர்ந்து வரும் சூஷ்மன நாடியும் சேரும். இந்த மூன்று நாடிகளும் நம் நெற்றிபோட்டில் தான் ஒன்று சேர்கின்றன. இங்கே வரும் குண்டலினி சக்தியானது இங்கிருந்து மேலே உள்ள ஸஹஸ்ராரத்துக்கு மேல் எழும்பும்.
உணர்வுகள்: தூக்கத்தில் நாம் காணும் கனவு இதனால் உணரப் படுகிறது. நம்முடைய கற்பனைக் கனவுகளும் இதனால் உணரப் படுகிறது. நாம் படுத்துக் கொண்டு காணும் கனவு மட்டுமில்லாது, பகல் கனவும் கூட இதனால் உணரப் படுகிறது.
அதி தேவதைகள்: அர்த்த நாரீஸ்வரர், ஹாகினி சக்தி
பிந்து: இது சக்கர வடிவில் ஆனது. நம்முடைய தலைக்குப் பின்னால் நாம் சாதாரணமாய்த் தலையை முடிந்து கொள்ளும் இடத்தில் உள்ளது. இது ஒரு சின்னப் புள்ளியைப் போல் தோன்றும். இங்கே அடி பட்டால் என்ன வேணாலும் நடக்கலாம். நம் முன்னோர்கள் பின்னந்தலையில் மட்டும் அடி படவே கூடாது என்பதோடு அந்தக் காலங்களில் ஆண்களும் முடி வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள். அதன் காரணமே இந்தப் "பிந்து"வைப் பாதுகாக்கத் தான். இப்போதும் ஆங்கில மருத்துவத்தில் தலையில் குறிப்பாய்ப் பின்னந்தலையில் அடிபடுவது கூடாது எனச் சொல்லப் படுகிறது. இங்கே அமிர்தமும் உற்பத்தி ஆகும், விஷமும் உற்பத்தி ஆகும். நம்முடைய உடலும், மனமும் இயங்குவது இதன் மூலம் தான். தேக்கி வைக்கப் பட்ட வெள்ள நீர் போல் இங்கே நம்முடைய செயல்களைப் பொறுத்து "ஆனந்தப் பெருவெள்ளமும்" ஏற்படலாம். மாறாகவும் ஏற்படலாம். ஒண்ணுமே இல்லாமலும் இருக்கலாம். ஒரு நீர்த்தேக்கம் போன்றது. இங்கிருந்து தான் "ஓங்காரம்" பிறக்கிறது. தோன்றி மறைகிறது. அல்லது புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருகிறது. புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருவது தான் உத்தமம். இது நம் உடலின் விஷுத்த சக்கரத்தோடு சேர்ந்து வேலை செய்யும். இது சரியாக இயங்காவிட்டால் அசைவுகளே இல்லை. சிலருக்கு ஏற்படும் புத்தி மாறாட்டத்துக்கும் இதுவே காரணம்.
ஸஹஸ்ராரம்: கடைசியில் முடிவுக்கு வந்துட்டோம். இது தான் நாம் கிடைக்குமா, கிடைக்குமா என ஏங்கும் இடம். ஆயிரம் இதழ் தாமரைப் பூவின் உருவம் கொண்ட இது தான் எல்லாவற்றுக்கும் மூலப் பொருள். 20 மடிப்புக்கள் கொண்ட இந்தத் தாமரைப் பூவின் ஒவ்வொரு மடிப்பிலும் 50 இதழ்கள் கொண்டது.
நம்மைப் பற்றில் இருந்து விடுபடச் செய்யும் இது. இறை சக்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஒன்றே தேவன், தேவனே ஒன்று" என அனைத்தையும் இறைவனாய்ப் பார்க்கும் பெருந்தன்மையான எண்ணம் இங்கே தான் தோன்றும். அனைத்துக்கும் ஆதாரம். இறைவனின் இருப்பிடம். நம்ம மதுரையம்பதி அம்பாளின் இருப்பிடம்னு சொல்லுவார். அப்படியும் சொல்லலாம். "ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி"யான "ஸ்ரீலலிதை" உறைவிடம்னும் சொல்லலாம். இதைக் கண்டு உணர்ந்தவர் வெகு சிலரே ஆவார். பாரதியார் அவர்களில் ஒருவர். இதைத் தான் அவர் தன்னுடைய "அக்கினிக் குஞ்சு" பாட்டின் மூலம் சொல்லுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!"
என்று தன்னுடைய மனதில் ஒரு சிறு பொறி போல் இருந்த இறை உணர்வு, மனதின் சகல ஆசா பாசங்களையும் பொசுக்கி விட்டு மனத்தை நிர்மலமாய் வைத்தது என்கிறார். பெறற்கரிய பேறு பெற்றதாய்ப் பெருமையுடம் ஆடியும் பாடுகிறார். இறைவனைக் காணாமல் இவ்வாறு கவலை இல்லாமல் குதிக்க முடியுமா? பொறி என்னமோ சின்னது தான். இருந்தாலும் ஒரு பொறி போதுமே என்கிறார் மனதைச் சுட்டுப் பொசுக்க.
இதில் இருந்து தான் "சக்தி" மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். பிரதான சக்தி என்றும் சொல்லலாம். நீரில் இருந்து எவ்வாறு மின்சாரம் எடுக்கப் பட்டு நம் அனைவரையும் வந்து அடைகிறதோ அது போல் இங்கிருந்து தான் நமக்குத் தேவையான மூலசக்தி கிடைக்கிறது.
ஆனால் நாம் அதைச் சரியாகப் பிரயோகம் செய்வது இல்லை. மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும், அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழுப்பிப் படிப் படியாக மேலே கொண்டு வந்து அது பிந்து வெள்ளத்துடன் ஒன்று சேர்ந்து ஸஹஸ்ராரத்தை அடையும்போது மனிதன் "சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில்" மூழ்குகிறான். யோக சித்தி கிடைக்கிறது. தான் யார் என்பதை உணருகிறான்.
No comments:
Post a Comment